Thursday, March 3, 2016

மானுடம் வாழும் -சுசீலா மாமி! (மன்னை நினைவலைகள்)

மெத்த படித்தவரல்ல; ஆணும் பெண்ணும் சரி நிகர் என எண்ணும் குடும்பத்தில் வந்தவரும் அல்ல.
பைங்காநாட்டில் பிறந்து 12 வயது வரை மட்டுமே பள்ளிக்கு அனுப்பட்டவர்;
சுட்ட அப்பளமும், வத்த குழம்புமாய், வறுமையில் மிக செம்மையாய், சிக்கனமாய் குடும்பம் நடத்தும் பெண்மணி.

என் நினைவில் , பாதி  வெள்ளையும் , பாதி  கறுப்புமாய்  இரண்டே கால்கள் கொண்ட எலி வால் பின்னல்; அதில் ஒரு கிள்ளு பூ.
அள்ளி சொருகிய ஆறு முழ புடவை. கைகளிலும் கால்களிலும் எப்போதும் இருக்கும் மருதாணி நிறம்.
மாமி சற்றே மாநிறம் ஆனவர். வாயில் அவ்வவ்போது பெருகும் எச்சிலை முழுங்கியவாறே பேசுவார்.முகத்தில் எப்போதும் தேக்கிய புன்னகை அவரின் தனித்த அடையாளம்.
நிக்க நேரமில்லடி வித்யா; அம்மாவை வார மலரை எடுத்து வெக்க சொல்லு, வரும் போது வாங்கிகறேன் என்பார்.

மென்பொருள் துறையில் உள்ள கஷ்டங்களை பற்றி பலரும் பேசுகிறோம். அனால் இது தான் வேலை என்று இல்லாமல் எத்தனையோ வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றிய பெண்கள் அநேகம்.

மாமிக்கு இது தான் வேலை என்று இல்லை. சமையல் வேலை செய்வார்; வார பத்திரிகைகளை வாங்கி, அவற்றை பல வீடுகளுக்கு படிக்க கொடுத்து, அவற்றுக்கு ஒரு தொகையை வாங்கி கொள்வார்.
ரேஷனில் கால் கடுக்க நின்று உங்கள் வீட்டின் பொருட்களையும் வாங்கி கொண்டு வந்து தருவார்; கத்திரி வெயில் வாட்டும் நாட்களிலும் கூட வடகம் போட்டு விற்பார். எங்கள் தெரு குழந்தைகள் யார் போய் கேட்டாலும்,சுவையான எலுமிச்சை பிழிந்த காரமான அரிசி வடக மாவு கை நிறைய தருவார்.

மாமிக்கு கால்ல சக்கரம் தான் வெச்சுருக்கு; மேல ரெண்டாம் தெருலேந்து அசேஷம் வரைக்கும் கூட தினமும் நடப்பார். 18 நாள் உற்சவத்திற்கும், எங்கள் மன்னை ராஜ கோபாலனை பார்க்க மாமி ஆஜர்.
எங்களை மாதிரி சில குடும்பங்களுக்கு மாமி வந்து சாமியின் டைம் டேபிள்  சொல்வார்; சாமி இன்னும் கீழ ராஜ வீதியில இருக்கு; சீக்கிரம் போங்கோன்னு.
ஒரு நாளும் உடம்பு முடியலைன்னு சொல்லி பாத்ததில்ல  நாங்க.

அன்றைக்கு (1980-2000)  எந்த ஒரு வீட்டில் இல்லாதது  கேமரா. மாமியின் புகைப்படம் இல்லை என்னிடம். மன்னையில் அன்று இருந்த பல குடும்பங்கள் இன்று சென்னைக்கு பயணித்து விட்டன. மாமி போன்று சிலர் எங்கள் நினைவில் என்றும் நீங்கா முகமே.

மாமிக்கு மூன்று பெண்கள்; நார்மடி உடுத்திய பாட்டி- மாமியின் மாமியார்- உடல் வற்றிய ஒரே வேளை ஒரு கை உண்ணும்  பாட்டி .அவர் சிறுமியாய் இருக்கும் போது வெள்ளைகார துரை குதிரையில் வந்தால் எப்படி நடுங்கி ஒளிந்துகொள்வர் என கதை சொல்லுவார்.மாமா ரிடையர் ஆகி, எலெக்ட்ரிசிட்டி வேலை பார்த்தார்.

சாதி மத பேதமில்லாத ஒரு விஷயம்  பெண் சிசுக் கொலை ; நவ நாகரிகம் மிக்க இந்த நாளிலும் நடக்கும் அவலம்.

வரதட்சணை கொடுமை அதிகம் இருந்த எண்பதுகளில், பெண் குழந்தைகள் எல்லா வீடுகளிலும் வரவேற்கப்பட்ட மழலைகள் அல்லர்.

மாமியின் மூன்றாவது பெண் குழந்தை பிறந்த போது அதை உடனே மேல் உலகம் அனுப்ப தயாராய் இருந்தன சுற்றங்கள்.
அஞ்சு பெண்ணை  பெத்தா அரசனும் ஆண்டி ஆவான்;உன் புருஷன் ஒண்ணும் அரசனும் இல்ல என்பதான புத்தி மதிகள் வேறு.

மாமி மிக தெளிவாய் முடிவெடுத்தார்- என் குழந்தைக்கு தேவையான பணத்தை நான் எப்பாடு பட்டாவது சம்பாதிக்கிறேன்; என் குழந்தை வாழ வேண்டும்.அன்றிலிருந்து ஓட்டம் தான்.
மூன்று பெண்களையும் படிக்க வைத்து, நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்தார்.
கடைசி பெண்ணுக்கு திருமணம் செய்ய ஒரு வருடம் அமெரிக்காவில் தெரியாத யாரோ ஒருவர் வீட்டில் சிறு பிள்ளையை பார்த்துக்கொள்ள போனார்.
நிறைய நேரங்களில், படித்த நல்ல வேலைக்கு செல்லும் பெண்களுக்கே அவ்வப்போது தோன்றும் அவ நம்பிக்கை, சுய திறமை குறித்த சந்தேகம் எனத் தோன்றும் தருணங்களில், நம்பிக்கை நட்சத்திரமாக மனக்கண்ணில் தோன்ற வேண்டியவர் மாமி போன்றவர்கள்.

வீடு வேலைகளிலோ, அலுவலக வேலைகளுக்கோ, நிறைய நேரங்களில் அங்கீகாரம் தேடும் தலைமுறை நாம். மாமி போன்றவர்கள் வாழ்க்கையில் நல்ல பாராட்டை எப்போதோ ஒரு முறை தான் பார்த்து இருப்பார்கள்.

மாமி இப்போது சென்னையில் இருக்கிறாராம்.  பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டன; அடுத்த இந்திய பயணத்தில் எங்கு இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். மாமிக்கு ஒரு சல்யுட்!







4 comments:

  1. Super vidhya...enjoyed reading it....

    ReplyDelete
  2. Vidya vazghavalamudan nandraga kadai cholla varuguthu vittu vidathe soppose mamiyai parthal ennudaya namaskaram chollu vazghavalamudan

    ReplyDelete
  3. Vidya vazghavalamudan nandraga kadai cholla varuguthu vittu vidathe soppose mamiyai parthal ennudaya namaskaram chollu vazghavalamudan

    ReplyDelete