Wednesday, March 23, 2016

கல்யாண தேனிலா.. காய்ச்சாத பால் நிலா...!

போன டிசம்பர் மாசம் (12.12.15), மாலை ஒரு ஆட்டோல அண்ணா சாலை பக்கம் போய்கிட்டு இருந்தேன். எல்லாரும் வானத்தையே பார்த்துட்டு இருந்தாங்க.
ஆட்டோ ஓட்டுனர் சொன்னாரு
- ஏன் எல்லாம் வானத்தையே பார்க்குறாங்க. உலகம் அழிய போகுதா?



நானும் வெளிய தலைய விட்டு மேல பார்த்தா- நிலாவிலிருந்து பால் வழியற மாதிரி காட்சி.
நான் ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்னையை நினச்சு, மனசளவுல நொந்து போய் வந்துகிட்டு இருந்தேன். ஏதோ கடவுள் அருள் மாதிரி அந்த நொடி நினச்சேன்.

வீட்டுக்கு வந்து பேப்பரை பார்த்தா- நம்ம சிங்கப்பூர் செயற்கைக்கோள் 
ஸ்ரீஹரி கோட்டாலேந்து விட்டு இருக்காங்க.
ஒரே அல்வாவா போச்சு. :)




Tuesday, March 22, 2016

சீன மூங்கில் - விடா முயற்சி சொல்லும் பாடம்!


என் பையன் படிக்கும் பள்ளியில் கண்ட ஒரு சுவரொட்டி இது.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதம்; ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வேறானது. குழந்தைகளை ஒப்பிடவும் வேண்டாம்; ஓடி விளையாட கூட நேரமின்றி அவர்களை எப்பொழுதும் படிக்க சொல்லவும் வேண்டாம்.

இப்போதுள்ள அவசர யுகத்தில், அம்மாக்கள் whatsapp  போன்றவற்றை கூட தத்தம் குழந்தைகளை பற்றிய அலசலாக ஆக்கும் கூத்தையும் காண முடிகிறது.

என் தோழிகளில் சிலர், வார வாரம் , வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி பற்றி படித்து கொண்டிருப்பர்; இவை எல்லாம் ஒரு அளவுக்கு தான் உதவும்.

குமரகுருபரர் என்ற ஒரு சைவ பெரியவர். சகலகலாவல்லி மாலை, மீனாட்சி பிள்ளை தமிழ் என பல நூல்கள் இவர் அருளிவை.
இவர் பிறந்து முதல் 5 ஆண்டுகள் ஒன்றும் பேசவில்லை.கந்தர் கலி வெண்பா பாடினார்- தன் ஐந்தாம் வயதில்!

தாய்மை என்பது ஒரு அனுபவம். ஒரு சின்ன குழந்தையோடு அதன் உலகில் பயணிக்கும் அனுபவம். தாயும் தந்தையும் தான் அவர்களுக்கு ஹீரோ ஹீரோயின் . 

குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கி வளர்கின்றனர். அவர்களுக்கு உரமாக நாம் தர வேண்டியது அன்பும், நல்ல அரவணைப்பும் மட்டுமே. சட்டென்று அவர்கள் தங்கள் வளர்ச்சியில் நம்மை வியக்க வைக்கின்றனர். 

என் மகனிடம் போன வாரம் சொன்னேன் - அம்மாவிற்கு ரொம்ப கால் வலிக்கிறது. இப்போது உன்னை விளையாட அழைத்து செல்ல முடியாதென.
அவன் மீண்டும் பிடிவாதம் பிடிக்க - காலையிலிருந்து உட்கார நேரமில்லை தம்பி. உனக்கு இதயம் இருக்கானு கேட்டேன்.
அவன் சொன்னான்- என்னிடம் triangle  square  எல்லாம் இருக்கு; ஹார்ட் இல்லைன்னு . நொந்துட்டேன்; அவனோட கிளம்பி கீழ போனேன் :)





Thursday, March 3, 2016

மானுடம் வாழும் -சுசீலா மாமி! (மன்னை நினைவலைகள்)

மெத்த படித்தவரல்ல; ஆணும் பெண்ணும் சரி நிகர் என எண்ணும் குடும்பத்தில் வந்தவரும் அல்ல.
பைங்காநாட்டில் பிறந்து 12 வயது வரை மட்டுமே பள்ளிக்கு அனுப்பட்டவர்;
சுட்ட அப்பளமும், வத்த குழம்புமாய், வறுமையில் மிக செம்மையாய், சிக்கனமாய் குடும்பம் நடத்தும் பெண்மணி.

என் நினைவில் , பாதி  வெள்ளையும் , பாதி  கறுப்புமாய்  இரண்டே கால்கள் கொண்ட எலி வால் பின்னல்; அதில் ஒரு கிள்ளு பூ.
அள்ளி சொருகிய ஆறு முழ புடவை. கைகளிலும் கால்களிலும் எப்போதும் இருக்கும் மருதாணி நிறம்.
மாமி சற்றே மாநிறம் ஆனவர். வாயில் அவ்வவ்போது பெருகும் எச்சிலை முழுங்கியவாறே பேசுவார்.முகத்தில் எப்போதும் தேக்கிய புன்னகை அவரின் தனித்த அடையாளம்.
நிக்க நேரமில்லடி வித்யா; அம்மாவை வார மலரை எடுத்து வெக்க சொல்லு, வரும் போது வாங்கிகறேன் என்பார்.

மென்பொருள் துறையில் உள்ள கஷ்டங்களை பற்றி பலரும் பேசுகிறோம். அனால் இது தான் வேலை என்று இல்லாமல் எத்தனையோ வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றிய பெண்கள் அநேகம்.

மாமிக்கு இது தான் வேலை என்று இல்லை. சமையல் வேலை செய்வார்; வார பத்திரிகைகளை வாங்கி, அவற்றை பல வீடுகளுக்கு படிக்க கொடுத்து, அவற்றுக்கு ஒரு தொகையை வாங்கி கொள்வார்.
ரேஷனில் கால் கடுக்க நின்று உங்கள் வீட்டின் பொருட்களையும் வாங்கி கொண்டு வந்து தருவார்; கத்திரி வெயில் வாட்டும் நாட்களிலும் கூட வடகம் போட்டு விற்பார். எங்கள் தெரு குழந்தைகள் யார் போய் கேட்டாலும்,சுவையான எலுமிச்சை பிழிந்த காரமான அரிசி வடக மாவு கை நிறைய தருவார்.

மாமிக்கு கால்ல சக்கரம் தான் வெச்சுருக்கு; மேல ரெண்டாம் தெருலேந்து அசேஷம் வரைக்கும் கூட தினமும் நடப்பார். 18 நாள் உற்சவத்திற்கும், எங்கள் மன்னை ராஜ கோபாலனை பார்க்க மாமி ஆஜர்.
எங்களை மாதிரி சில குடும்பங்களுக்கு மாமி வந்து சாமியின் டைம் டேபிள்  சொல்வார்; சாமி இன்னும் கீழ ராஜ வீதியில இருக்கு; சீக்கிரம் போங்கோன்னு.
ஒரு நாளும் உடம்பு முடியலைன்னு சொல்லி பாத்ததில்ல  நாங்க.

அன்றைக்கு (1980-2000)  எந்த ஒரு வீட்டில் இல்லாதது  கேமரா. மாமியின் புகைப்படம் இல்லை என்னிடம். மன்னையில் அன்று இருந்த பல குடும்பங்கள் இன்று சென்னைக்கு பயணித்து விட்டன. மாமி போன்று சிலர் எங்கள் நினைவில் என்றும் நீங்கா முகமே.

மாமிக்கு மூன்று பெண்கள்; நார்மடி உடுத்திய பாட்டி- மாமியின் மாமியார்- உடல் வற்றிய ஒரே வேளை ஒரு கை உண்ணும்  பாட்டி .அவர் சிறுமியாய் இருக்கும் போது வெள்ளைகார துரை குதிரையில் வந்தால் எப்படி நடுங்கி ஒளிந்துகொள்வர் என கதை சொல்லுவார்.மாமா ரிடையர் ஆகி, எலெக்ட்ரிசிட்டி வேலை பார்த்தார்.

சாதி மத பேதமில்லாத ஒரு விஷயம்  பெண் சிசுக் கொலை ; நவ நாகரிகம் மிக்க இந்த நாளிலும் நடக்கும் அவலம்.

வரதட்சணை கொடுமை அதிகம் இருந்த எண்பதுகளில், பெண் குழந்தைகள் எல்லா வீடுகளிலும் வரவேற்கப்பட்ட மழலைகள் அல்லர்.

மாமியின் மூன்றாவது பெண் குழந்தை பிறந்த போது அதை உடனே மேல் உலகம் அனுப்ப தயாராய் இருந்தன சுற்றங்கள்.
அஞ்சு பெண்ணை  பெத்தா அரசனும் ஆண்டி ஆவான்;உன் புருஷன் ஒண்ணும் அரசனும் இல்ல என்பதான புத்தி மதிகள் வேறு.

மாமி மிக தெளிவாய் முடிவெடுத்தார்- என் குழந்தைக்கு தேவையான பணத்தை நான் எப்பாடு பட்டாவது சம்பாதிக்கிறேன்; என் குழந்தை வாழ வேண்டும்.அன்றிலிருந்து ஓட்டம் தான்.
மூன்று பெண்களையும் படிக்க வைத்து, நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்தார்.
கடைசி பெண்ணுக்கு திருமணம் செய்ய ஒரு வருடம் அமெரிக்காவில் தெரியாத யாரோ ஒருவர் வீட்டில் சிறு பிள்ளையை பார்த்துக்கொள்ள போனார்.
நிறைய நேரங்களில், படித்த நல்ல வேலைக்கு செல்லும் பெண்களுக்கே அவ்வப்போது தோன்றும் அவ நம்பிக்கை, சுய திறமை குறித்த சந்தேகம் எனத் தோன்றும் தருணங்களில், நம்பிக்கை நட்சத்திரமாக மனக்கண்ணில் தோன்ற வேண்டியவர் மாமி போன்றவர்கள்.

வீடு வேலைகளிலோ, அலுவலக வேலைகளுக்கோ, நிறைய நேரங்களில் அங்கீகாரம் தேடும் தலைமுறை நாம். மாமி போன்றவர்கள் வாழ்க்கையில் நல்ல பாராட்டை எப்போதோ ஒரு முறை தான் பார்த்து இருப்பார்கள்.

மாமி இப்போது சென்னையில் இருக்கிறாராம்.  பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டன; அடுத்த இந்திய பயணத்தில் எங்கு இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். மாமிக்கு ஒரு சல்யுட்!