Sunday, April 10, 2016

நாவல் பயிலரங்கு அனுபவம் (10-4-2016)

10-4-2016 : நாவல் பயிலரங்கு!.
காலைல அங் மோ கியோ நூலகத்துக்கு நான் வரும்போது திரு.இளங்குமரன் நிகழ்ச்சி இங்க தானானு அவர் நண்பர்களுக்கு அலைபேசியில் கேட்டுகொண்டிருந்தார்.
ஊருக்கு முன்னாடி சொன்ன நேரத்துக்கு குழந்தையை விட்டுட்டு வந்தாச்சு; ஆனா பயிலரங்கு ஆரம்பிக்க மணி 10 ஆயிடுச்சு.


ஆரம்பிச்ச பிறகு எல்லோர் பேச்சுமே நன்றாக இருந்தது. தோழிகள் கூட்டத்தோடு, சிரித்த வண்ணம், முழு நாளுமே நிறைவாக இருந்தது.

நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம். எங்க மேஜைல எங்களுக்குள்ளேயே நிறைய விவாதிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் செய்ய முடிந்தது.

திரு.புண்ணியவான் அவர்கள், தி.ஜானகிராமனின் மோகமுள் பற்றி பேசும்போது நாங்கள் அதில் வரும் வேறு சிலரை பற்றியும் பேசினோம்.

ஒரு விஷயம் மிகத்தெளிவாய் புரிந்தது.தமிழர் வாழும் எல்லா நாடுகளிலும் சிங்கப்பூர் போல இலக்கியத்துறையில் ஈடுபட சூழ்நிலை நிலவுவதில்லை.
சிகப்பு அட்டை பற்றி திரு.கோ.புண்ணியவான் அவர்கள் பேசும்போது அந்த சூழல் கண் முன்னே விரிந்தது. அவரது நூலான செலாஞ்சார் அம்பாட் படிக்க வேண்டும்.
திரு.வித்யாசாகர் பேசும்போது அடிக்கொருதரம் நாங்கள் சிரித்துக்கொண்டே இருந்தோம். தென்றல் பத்திரிகையும் கொடுத்தார்கள்.


திருமதி ஜெயந்தி ஷங்கரின் திரைக்கடலோடி சிறுகதை தொகுப்பை ஒரு சிலர் வாசித்திருந்தோம். ஒவ்வொரு சிறுகதையும் ஒரு விதம்- ஒரு கதையில் ஒரு இந்திய ஆடவர் சிங்கப்பூர் பெண்ணைத்திருமணம் செய்வார்; ஆனால் திருமணத்தின் பின்னர், எல்லா அதிகாரமும்  அந்த பெண்ணின் கையிலும் அவளின் பெற்றோர் கையிலுமே இருக்கும்.

இன்னொரு கதையில் ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கென இந்தியாவிலிருந்து வரவழைத்தால், அந்த பெண் நான் வீட்டு வேலைக்கு வரவில்லை ;எனக்கு அலுவலக வேலை தான் வேண்டும் என்று அழுது தீர்ப்பாள். நீ இந்த விசாவில் வேறு வேலை செய்ய முடியாது என்று சொன்னால் ஏற்று கொள்ளும் மன நிலையில் இருக்க மாட்டாள்.

அவளை ஊருக்கு திருப்பி அனுப்புவதற்குள் படும் பாடு; அவள் தன் சொந்த ஊர் வரை சென்று சேர்ந்தாள் என அறிந்த பிறகு வரும் நிம்மதி என பல உணர்ச்சிகளைத்தொடும் மற்றொரு கதை.

நான் கடைசி நிமிஷத்தில் திருமதி.ஜெயந்தி ஷங்கர் அவர்கள் வருகிறார்கள் என்ற ஆவலில் தான் சேர்ந்துகொண்டேன்.

நூலகத்தில் அவரது சிறுகதைத்தொகுப்பை முதலில் வாசித்தேன்.முதல் வாசிப்பிற்கு பிறகு, அடுத்த முறையிலிருந்து நானாக  அவர் புத்தகங்களைத்தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.

அவரின் கதைகளில் அவரால் மற்ற எழுத்தாளர்களை விட சீன கலாச்சாரத்தை பற்றி அறிந்து எழுத முடிகிறது.அதற்கு காரணம்,தான் வளர்ந்த சூழலும் , திறந்த மனதோடு இருப்பதும் தான் என்றார்.

சிங்கப்பூரின் வாழ்க்கை முறையை,இங்கு உள்ள சிக்கல்களை , கதை வடிவாக தமிழர் வாழும் பல நாடுகளுக்கு இவரின் நூல்கள் அழகாய் சொல்கின்றன.

ஒரு திட்டம் போட்டு தான் நாவல் எழுதணுமா? 
நாவல் முழுக்கவே ஒரே ஆள் கதை சொல்வது போன்று அமைந்தால் அந்த நாவல் படிக்க சுவாரஸ்யமாய் இருக்குமா?இப்படி சில கேள்விகள்!

எனக்கு சமையல் செய்யும் போது ஒரு வரி தோணும்; எழுதறதுக்குள்ள எங்கியாவது மறந்திடுமோனு  பதட்டம் ஆயிடும் - இது தான்  வினுதா,பானு சுரேஷ், தமிழ் செல்வினு எங்க மேஜைல இருந்த எல்லாரோட எண்ணமும்.

திருமதி.ஜெயந்தி ஷங்கர் சொன்னாங்க.-" உங்களுக்கு உள்ள இருக்கற கதை உங்களை விட்டு போகாது . பதட்டம் வேண்டாம். நாள்பட எழுதும் போதும் இந்த பதட்டம் போயிடும். ஒரு பேப்பர் பென்சில் வெச்சு, தூக்கத்தில தோணுகிற கருத்தை எழுதிடுங்கனு' .
 அட. இது கூட நல்லா இருக்கேன்னு தோணிச்சு.

திருமதி.பிரேமா மகாலிங்கம் உங்களுக்கு பயனுள்ளதா இருக்கானு கேட்டுகிட்டே இருந்தாங்க. நான் வாசகர் வட்டத்துக்கு புது வரவு.அவங்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரா, எல்லார் மேலயும்
நல்ல அக்கறை.

சொந்த அனுபவமா இருக்கறது நல்லதுன்னு சொன்னதும், ஒருத்தர் கேட்டார், கொலை பற்றிய கதைனா, கொலை பண்ணிட்டா எழுத முடியும்னு?

பாதையில் பதிந்த  அடிகள் - திருமதி.ராஜம் கிருஷ்ணன் அவர்களின் மணலூர் மணியம்மாள் பற்றிய நூல். கொஞ்சம் கொஞ்சமாக மனியம்மாளை பற்றி அவர் வாழ்ந்த ஊரில் சென்று தகவல் சேர்த்து தான் எழுதினார்

திருமதி சிவசங்கரியின் பாலங்கள் நாவல் அவர் இந்த நாவலுக்காக எத்தனை முயற்சி எடுத்திருப்பார் என்று வியக்க வைத்தது. மூன்று தலைமுறை வாழ்க்கையையும் எழுத நிறைய பாட்டிகளோடு பேசினார் சிவசங்கரி.
சொந்த அனுபவம் இல்லேன்னா ரொம்ப முயற்சி செய்து அதுக்காக உழைக்கணும்.

நாங்களாக எங்களுக்கு தெரிந்த கதைகளை பற்றியும் பேசினோம்.
எதையும் திறந்த மனசோட அணுகினா ஒரு எழுத்தாளனுக்கு மற்றவர்களுக்கு தெரியாத கோணங்கள் கிடைக்கும் என்பது தான் திரு.வித்யாசாகர், திருமதி.ஜெயந்தி ஷங்கர் இருவரும் சொன்ன கருத்து.

சட்ட சிக்கல்களை பற்றிய கேள்வி எழும்போது, Loss and Laws புத்தகம் பற்றியும் கேட்க நேரிடும் என்று எதிர்பார்த்தேன்.

திருமதி.ஜெயந்தி ஷங்கரின் திரிந்தலையும் திணைகள் நாவலில் வரும் பாலசுப்ரமணியர் கோவில் என் வீட்டில் இருந்து பத்தடி; 

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.அவரின் அறிமுகம் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு மறக்க முடியாத தருணம்.அவர் சொன்ன பதில்களில் வெளிப்பட்ட உண்மையும், தெளிவும் அவரின்  சிந்தனையில் உள்ள முதிர்ச்சியை அழகாய் காட்டின.

வடை, பாயசம்னு உணவும் ருசி; காதுக்கு வந்த உணவும் ருசியே.
நல்ல அனுபவம்; நன்றி- திரு.பாலு மணிமாறன் மற்றும் தங்க மீன் ஏற்பாட்டுகுழுவிற்கு.