Sunday, November 15, 2015

இந்த கோலத்தை ரசிக்கலாமா :)

நம்ம ஊர் கோலங்கள் பல வகை, - சிக்கு கோலம், பூக்கோலம், கலர் கோலம்னு!
பெல்ஜியம் நாட்டின் ப்ருச்செல்ஸ் (Brussels) நகரத்தில் வருட வருடம், இந்த பூக்களால் ஆன தரை அலங்காரம் சுற்றுலா பயனிகளுக்களை கவரும் வகையில் அமைக்க படுகிறது.இது  2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகஸ்ட் மாதம் ஒரு வார இறுதியில் அமைக்க படுகிறது.
75 மீ நீளமும், 24 மீ அகலத்திலும், ஒரு சதுரத்தில் 300 பூக்கள் என, 4 மணி நேரத்தில், 100 பேரின் கை வண்ணம் இது.


இது நம்ம வீட்டுக்கோலம்!


நம்ம கலாச்சாரத்தை சின்னகுழந்தைகளுக்கு அழகா சொல்லி தர, பலகாரத்தையும், பல வண்ண கோலங்களும் அழகான வழிகள் :)


எப்படி இருக்குனு சொல்லுங்க!!!


Saturday, August 8, 2015

அப்படி என்ன தெரிந்துக்கொள்ள வேண்டும்???- சிங்கப்பூரிடம் !


இன்று, சிங்கப்பூர் பொன் விழா காண்கிறது.மிக சிறிய நாடாக இருந்தாலும், பெருமைக்குரிய பல சாதனைகளைக்கடந்து, உலக நாடுகள் மதிக்கும் முக்கிய நாடாக தன்னை எப்போதும் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறது. திரு.லீ குவான் யூ அவர்கள் வழி நடத்திய இந்த தேசம், நல்லொழுக்கமும், பல்வேறு இனத்தவரும், வேறுபாடின்றி ஒன்றாய் வாழ முடியும் என்பதன் முன் மாதிரி.

ரொம்ப சின்ன ஊருய்யா; அதான் நல்லபடியா செய்ய முடியுது!!!!. இது இந்தியாவிலிருந்து வரும் பலரும் சொல்வது. 

ஆனால் இந்த நாட்டின் சாதனை, ஊழலற்ற அரசாங்கம், தொலை நோக்கு பார்வையுடன் தீட்டப்ட்ட திட்டங்கள், மக்களின் முழு ஒத்துழைப்பு என,இந்த வெற்றிக்கு உந்து சக்தியாக இருக்கும் பல விஷயங்கள் வளர்ந்து வரும் பல நாடுகள் எளிதில் சாதிக்க முடியாதவை.


 ஒரு 8 ஆண்டுகள் இங்கு வாழ்ந்த அனுபவத்தில், சில வித்தியாசங்கள், சட்டென கண் முன் விரிகின்றன.


  • மறந்தும் யாரும் குப்பைகளைக்கண்ட இடத்தில் வீசுவதில்லை. 300/500 வெள்ளி அபராதம் பொது இடத்தில் குப்பை போடுவோருக்கு- இரண்டாம் முறை சிறை தண்டனை என, சட்டம் கடுமையாய் இருக்கிறது.



  • நம்ம ஊரிலே நம்மளை படாதபாடு படுத்தும் கொசுக்களைக்கட்டோடு அழிக்கிறார்கள்.டெங்கி தாக்குதல் உங்கள் குடியிருப்பு பகுதியில் தெரிந்தால், உங்கள் வீட்டுக்கு தீடீரென சோதனைக்கு அலுவலர்கள் வருவார்கள்; கழிவறை, பூச்சாடி என  தண்ணீர் தேங்கி இருக்கிறதா என்று கண்டு செல்வார்கள்.
  •  எல்லா அரசு துறைகளின், இணைய பக்கங்களில் உங்களுக்கு தேவையான தகவல்கள், படிவங்கள், அவற்றை இணையத்தில், கட்டணத்தோடு சம்ர்ப்பிக்க வழிகளும் இருக்கின்றன. இதனால், அரசு அலுவலகங்களின் நேரம், வீணாவதில்லை. பொது மக்களும், விடுமுறை எடுத்துக்கொண்டு அலைய தேவையில்லை.
  • எல்லா இன பெண்களும், பயமின்றி படிக்கவும், வேலைபார்க்கவும் முடியும். சட்டங்கள் மிகக்கடுமையாய் இருப்பதால் பெண்களை யாரும், கேலி செய்வதை பார்க்க முடியாது.இந்தியாவில், பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்கொடுமைகளுக்கு, இது முற்றிலும் வேறான அனுபவம்.
  • எங்கு சென்றாலும் கழிவறைகள், குழந்தைகளின் கைத்துண்டு(Diaper) மாற்றும் அறை இருக்கும். அதனால்,நாள் முழுக்க பயந்துக்கொண்டு, தண்ணீர் அருந்தாமல், அலைய வேண்டியதில்லை.
  • ஒரு மருத்துவமனையிலிருந்து, நீங்கள் வீட்டுக்கு செல்வதற்கு முன், மொத்தப்பணத்தையும் கட்டத்தேவையில்லை. மொத்தப்பணம் எத்தனை செலுத்த வேண்டும் என்பது, வீட்டுக்கு ஒரு கடிதமாய் வரும். நீங்கள் தவணையில் செலுத்தலாம்.

  • எல்லா உணவுக்கூடங்களுக்கும் அவற்றின் தூய்மையைக்கணக்கில் கொண்டு (A/B/C),  என பிரிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் வீட்டில் சமைக்க முடியாமல், அலுவலகம் நோக்கிச் செல்வோரும், தம் வயிற்றைக்காத்துக் கொள்ள இது உதவுகிறது.
  • வாடகைக்காரில் செல்லும்போது, பயணிப்பவர், கண்ணுக்குத்தெரியும்படி, வாகனத்தின் எண்ணும், ஓட்டுனர் பெயரும் இருக்கும்.இது உங்களின் பாதுகாப்பிற்கென இவர்கள் கடைப்பிடிக்கும் விதி. சென்னை போன்ற நகரங்களில், பெண்கள் தனியாக பயணிக்கும் பொழுதுகளில், நம் இந்திய அரசாங்கம் பின் பற்ற வேண்டிய சின்ன உதாரணம்.
  • குடி நீரைப்பாதுகாக்க அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. பசுமைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நிலம் மிக சிறிய அளவிலிருப்பதால், இங்கு பல அடுக்கு வீடமைப்புப்பேட்டைகள் அதிகம். ஆனால் எங்கும் குழந்தைகள் விளையாடவும், பெரியவர்களின் உடற்பயிற்சிக்கும் வசதிகள் கண்டிப்பாக இருக்கும்.



  • தமிழ் இங்கே உண்மையில் வாழும் மொழியாக இருக்கிறது. எங்கள் திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலிருந்து, நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ் மொழி விழா, அவ்வையார் விழா, திருமுறை மாநாடு, பைந்தமிழ் விழா, கம்பன் விழா, என்று, இங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் அதிகம்.
  • நடைமுறை சிக்கல் அதிகமில்லாமல், அமைதியாக வாழவும், நம் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வழி செய்கிறது சிங்கப்பூர்.
  • குறை மாதத்தில் பிறந்த என் மகன் இன்று நல்லபடியாய் இருப்பதற்கு, சிங்கப்பூரின் மருத்துவ வசதிகளும், தூய்மையான சூழலும் முக்கியக்காரணங்கள்.!
சிங்கப்பூர் தேசிய தின வாழ்த்துக்கள்!!!




Sunday, March 29, 2015

காலத்தை வென்றவர்- திரு. லீ குவான் யூ!

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறையென்று வைக்கப் படும்
."-திருக்குறள்

இங்கு இன்று, சிங்கை மக்களின் இறைவனாய் உயர்ந்த  திரு.லீ குவான் யூ அவர்களின், இறுதி சடங்குகள் நடைபெற்றன.

இது சிங்கையில்  அனைவருக்கும் மனதிற்கு மிகக்கனமான ஒரு வாரம். கொட்டும் மழையிலும், கொஞ்சமும் நகராமல், அவர் பெயரை முழங்கியவாறு, வீதியெங்கும் நின்ற மக்கள் கூட்டத்தில்,மக்களுக்காக  சேவையாற்றிய அவரின் உயரிய வாழ்வும், மக்கள் தம் நல்வாழ்க்கைக்கு வித்திட்ட திரு.லீ அவர்களுக்குக்காட்டும் நெஞ்சார்ந்த நன்றியும் வெளிப்பட்டன.




சிங்கப்பூருக்கு இந்தியாவிலிருந்து  வந்த என் போன்ற முதல் தலைமுறைக்கு இங்கு நடப்பது அதிசயம்.இந்த தீவுத்தேசம் தன் 50வது ஆண்டில் இருக்கிறது.

நாங்கள் இந்தியாவிலிருந்து இங்கு வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. முதல் முறை சிங்கை மண்ணில் காலடி வைத்ததுமே அதன் விண்ணளவு வளர்ச்சியை கட்டிடங்கள் சொல்லாமல் சொன்னாலும், மறுபக்கம் இது பசுமை நகரம் என்பது காணும் பச்சை நிற மரங்கள் சொல்லும்.இந்த நகரம் பூங்கா நகரமாக திகழ வித்திட்டவர் திரு.லீ.


சிங்கப்பூரில் அன்றைய அடிப்படை தேவைகளான நல்ல வீடுகள், சுத்தமான தண்ணீர், உயர் தர கல்வி என எல்லாவற்றிலும், இவரும், இவருடைய சகாக்களும் செய்த பணிகள் என்றும், சரித்திரத்தில் நீங்கா இடம் பெறுவன.

ஒற்றுமையான மக்கள்; ஒருங்கிணைந்த தேசம் என்று முழங்கியவர் திரு.லீ. 

சிங்கையில் அவரவர் தாய் மொழியையும் பயில வழி வகுத்தவர் திரு.லீ. நாங்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்தாலும் கூட இன்றைய நகர பள்ளிகள் தமிழை சிறு பிள்ளைகள் படிக்க வழி வகுக்கின்றனவா என்பது நம் மனசாட்சிக்குத்தெரியும்.!!! 

இங்குள்ள ஒரு பள்ளியில் படிக்கும் என் 4 வயது பிள்ளை, ஆத்திச்சூடியை அழகாய் சொல்ல சொல்ல, என் மனம், திரு.லீ அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறது.

பெயரளவில் தமிழை வளர்க்கிறோம் என்று பேசுவதற்கும், நடைமுறையில்,உண்மையில் தமிழை இளையர்களுக்குக்கொண்டு சேர்க்கும் சிங்கப்பூருக்கும், ரொம்ப தூரம்!!!

இன்றைய இரங்கல் கூட்டத்தில் பேசிய ஒருவர் மலாய் மொழியில் ஒரு கவிதை வாசித்தார். ஒருவர் உங்களுக்கு செய்த நற்செயலை உங்களால் எப்படியும் ஈடு செய்ய முடியாது என்றார்.

உண்மை தான்!!!. ஒரு தாயாக, என் பிள்ளை 33 வாரங்களில், 1.5 கிலோ எடையில் பிறந்த போது எங்களைக்காத்து, நாங்கள் இன்று நல்லபடியாய் இருக்க காரணம்,சிங்கப்பூரின் மருத்துவ தொழில் நுட்பமும், எங்களை சுற்றி இருந்த நல்ல உள்ளங்களும் தான்.
 திரு.லீ போன்ற பெரியவர்கள், மருத்துவ துறை எப்படி இயங்க வேண்டும், என்று விதித்த செயல் திட்டத்தின் பலன் தான், இங்கு  பிறக்கும் எடைக்குறைந்த குழந்தைகளைக்கூட  எப்படியாவது பிழைக்க வைக்கும் வித்தையைச்செய்கிறது.

என் பிள்ளையைக்கண்ணென காத்த செவிலியரில், அனைத்து இனத்தவரும் உண்டு.
ஒரு பெண்ணாக எந்த நேரத்திலும் அச்சமில்லாமல், வெளியே சென்று வர முடியும் என்ற பாதுகாப்பிற்குக்காரணம், திரு.லீ அவர்கள் வகுத்த கடுமையான சட்டங்கள்.

எங்கள் தஞ்சை மாவட்ட கிராமங்கள் பலவற்றிலிருந்தும், சிங்கை மண்ணினால் உயர்ந்த குடும்பங்கள் பல.

ஊழலற்ற அரசாங்கம், தகுதிக்கு முன் உரிமை என்று திரு.லீ நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய ராம ராஜ்யம், உலக நாடுகள் பலவற்றுக்கு ஒரு வாழ்க்கை பாடம்.

வழக்கமாக எங்களுக்குத்தெரிந்து நம்மூரில் அரசியல் கட்சி தலைவர், கைதானாலோ, அல்லது இறந்தாலோ, பாதிப்பு சாதாரண மக்களுக்குத்தான்; பேருந்து ரயில் சேவைகள் பாதிக்கப்படும். ஆனால் இங்கு  அவருக்கு மரியாதை செலுத்த வந்த கூட்டத்தினருக்காக 24 மணி நேரமும் ரயில் சேவையும், பேருந்து வசதியும் இருந்தன.

எங்கள் அடுக்ககத்திற்கு அடிக்கடி மக்களைச்சந்திக்க வருவார் சட்டத்துறை அமைச்சர் திரு.சண்முகம்.அரசியலில், கடை நிலை ஊழியர் கூட பத்து பேரோடு அலையும் சூழலுக்கு பழகிய நமக்கு இவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.



திரு.லீ, அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இறுதி மரியாதை செய்த கூட்டத்தில் நாங்களும் இருந்தோம் என்பதே எங்களுக்கு ஒரு நிறைவு தந்தன. அன்னாருக்கு என்றும் எங்கள் பிரார்த்தனைகள்!