Sunday, June 13, 2010

மாறுமா மனங்கள்?

எங்க ஊரு வட்டார வழக்குல "எங்க பெண்ணை பக்கத்து ஊர்ல கெட்டி கொடுத்து இருக்கோம்னு" சொன்ன காலம் போய், உங்க பொண்ணு வேலைக்கு போவாளா? கலிபோர்னியாக்கு போக சம்மதமா? என்பதில் இன்றைய திருமணங்கள் வந்து நிற்கின்றன.
ஆனால் இன்னமும் துளியும் மாறாத, திருமணம் சார்ந்த- பல விஷயங்களை பற்றி அலசும் பதிவு இது.
(நானும் ஒரு மருமகள் என்பதால் இந்த பதிவு மருமகள் கோணத்தில் இருந்தே இருக்கும் :)-)

1. எந்த சமூகத்தினராக இருந்தாலும் மாறாத முதல் கேள்வி "எத்தனை பவுன் போடுவேள்?" என்பது. பெண் பார்க்கும் போது முதலில், சொல்லும் சராசரி வாக்கியம் உங்க பொண்ணுக்கு நீங்க என்ன போடுவேளோ போடுங்கோ.
இந்த மாதிரி பரிவர்த்தனைகளை மாற்றி, அழகாய், சரிசமமாய் பங்களித்து செய்தால் திருமணம் இன்னும் அர்த்தமுள்ள நிகழ்வாய் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இது இன்றைய சமுதாயத்தில் மிகவும் தேவைப்படும் மன மாற்றம்.

2.எப்படி திருமணமாகி வரும் பெண் மனதவில் புதிய உறவுகளை எப்படி அரவணைப்பது என்று யோசிக்க வேண்டி இருக்கிறதோ, அதே போல, அந்த பெண்ணின் கணவன் வீட்டாரும் யோசிப்பது அவசியமே. "என் பிள்ளையை என்கிட்டேந்து பிரிச்சுடுவாளோனு புலம்பாம அழகாய் புதிய உறவை ஊன்ற செய்ய என்ன செய்யலாம் என்று யோசிப்பதே சரி. பல வீடுகளில், உள்ள, கணவனின் தங்கை தம்பிகள், அண்ணனுக்கு திருமணம் ஆன பின்னால்
தர வேண்டிய, ஆரோக்யமான இடைவெளியைத் தர மறுக்கின்றனர். இதுவே பல கருத்து மோதல்கள் வெடிக்க காரணமாகிறது.

3."ஆணும் பெண்ணும் நிகரென கொள்வதால் அறிவினில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்."
இது சுமார் 60௦ ஆண்டுகளுக்கு முன்னே பாரதியார் பாடினது. ஆனால் இன்றைக்கும் பிள்ளை வீடுகளில், மனைவிக்கு அடங்கி போகாதே, அப்படி இரு இப்படி இரு என்பதான உபதேசங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.பெரும்பாலான வீடுகளில், பெண்கள் பல வேலைகளை முகம் சுளிக்காமல், வலி பாராமல் எடுத்து செய்த பின்னரே, அலுவலகம் வருகின்றனர். அன்றைய நாட்களின், சம்ப்ரதாயங்கள் என்ற பெயரில் நடைமுறைக்கு உதவாத பல விஷயங்களை மருமகளின் தலையில் ஏற்றுவதை தவிர்க்கலாமே.

4.விதிகள் எல்லாருக்கும் பொது: ஒரு குடும்பத்தில் எதிர்பார்க்கப்படும் நடைமுறைகள், பிள்ளைகளுக்கு ஒரு விதமாகவும், மருமகள்களுக்கு வேறு விதமாகவும் இருக்க வேண்டியது அவசியம் இல்லை. முக்கால் வாசி குடும்பங்களின் சிக்கலே இதிலும் தொடங்கும். பிள்ளையை பத்து மணி வரை தாலாட்டும் பெற்றோர், மருமகள் அதிகாலை எழுந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.அதே போல பிள்ளை செய்யும் தவறை நியாயபடுத்தி மருமகளிடம் பேசுவதும் வீண் மனக்கசப்புக்கு இடம் கொடுக்கும்.

5.உளவியல் மகத்தாய் உதவும்:
சமையலோ, அல்லது அந்த பெண் ஆசையாய் வரையும் ஓவியமோ-அழகாய் பாராட்டுங்கள. அன்பான வார்த்தைகளே நாளை உறவு நீள உதவும்.சின்ன சின்ன பேச்சும், அழகான புன்னகையுமே, அடித்தளம். வீட்டில் அனைவரோடும் சேர்ந்து உங்கள் மருமகளை உண்ண சொல்லுங்கள். அது முடியாதென்றால், மருமகள் சாப்பிடும்போது என்ன வேண்டும் என்று அன்பாய் கேளுங்கள்.

6.சில கடினமான தருணங்களில், தோள் கொடுங்கள்: நாம் எல்லாருக்கும் வாழ்க்கை ஒரே போல இருப்பதில்லை. உங்கள் வீட்டில் மற்ற பெண்களுக்கு விரைவில் மகப்பேறு உண்டானால், உங்கள் மருமகளையும் கேள்வி கேட்டு துளைக்காதீர்கள். குறிப்பாய், இந்த மாதிரி வம்புக்கு அலையும் உறவினரிடம் இருந்து காப்பற்றுங்கள்.

No comments:

Post a Comment