Sunday, July 12, 2020

சமூக அக்கறை கொண்ட படைப்புகள்- நைரா மற்றும் மாலு- வாசிப்பு அனுபவம்!



நைரா:

ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி எப்படித் திருப்பூரை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் திரு.சுப்ரபாரதிமணியன். 

அரசியல், மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம் வேகமாக வளரும்  ஊரில் அந்த ஊரின் கடைநிலை  மனிதர்கள் இடம் மாறவேண்டிய கட்டாயம், மாட்டுக்கறிக்கென இருக்கும் கூட்டம் என்று பலவற்றையும் தொட்டிருக்கிறது இந்த நாவல். பள்ளிகளில் சமசீர் கல்விக்கான புத்தகங்கள் இல்லை என்பதுகூட விடப்படவில்லை. 
எனக்கு எப்படி இத்தனை விஷயங்களை ஒரே புத்தகத்தில் கோர்த்தார் என்பது  அதிசயமாக இருந்தது.

நைரா என்ற சொல் எனக்குப்புதிது.(நைஜீரியா நாட்டின் பணத்தை நைரா என்கிறார்கள்).

 முதல் அத்தியாயத்தில் ரயில் நிலையத்தில் கறுத்தப்பனையாக நிற்கும் நைஜீரிய மனிதனின் அறிமுகம் நன்றாக இருந்தது.
 
நம் ஊரில் விற்கும் சிவப்பழகு பொருட்களின் விளம்பரங்கள் வெள்ளைத்தோலை விரும்பும் மனதைத்தானே வெட்டவெளிச்சப்படுத்திக்காட்டுகின்றன. 

கெலுச்சி போன்ற ஆண்கள், பெண்களைப் படி, நல்ல வேலைக்கு போ என்று உற்சாகப்படுத்துபவர்காளாக இருந்தாலும், அவர்கள் சிவகாமி போன்றவர்களுக்கு ஒருவித அபசகுனம் தானே . 
நம்மவர் அத்தனை கருப்பாகவும், கெலுச்சி போன்றோர் நம் தமிழர்களின் சராசரி நிறத்திலும் இருந்தால், இந்தக்காதலுக்கு ஒரு தடையும் இருந்திருக்காது இல்லையா? 

ஒரு கதைசொல்லியாக, அங்கங்கே டைரிக்குறிப்புகளாக இந்தியாவையும், நைஜீரியாவையும் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, அங்கிருந்த தலைவர்கள், அவர்களைப்பற்றிய விமர்சனங்கள் என்று திரு.சுப்ரபாரதிமணியன் எடுத்துக்கொண்ட முயற்சி நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.

நைஜீரியா என்ற நாட்டைப் பற்றி ஓரளவு அறிமுகம் இந்த  நூலின் வாயிலாகக்கிடைத்தது. அங்கும் முருகன் கோயில்களும், தமிழ் பேசும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்குப்புது செய்தி .

நான் அமெரிக்காவில் ஒரு சில ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். கென்யா நாட்டிலிருந்து ஓரிருவர் என்னோடு வேலைப்பார்த்தனர். வெள்ளை இன மக்களைவிட, நம் தமிழ் சமூகத்தோடு அவர்களால் தங்களது, எண்ணங்களையும், கலாச்சாரம் தொடர்பான பகிர்தலையும் எளிதில் செய்ய முடிவதாக எனக்குத்தோன்றுகிறது. 

இந்தியாவில் தான் அகதிகளாகட்டும், வேலைக்கென வரும் வெளிநாட்டவர் ஆகட்டும், பயமின்றி இருக்கமுடியும். 

காட்சிப்படுத்தும் போது  ஒரு வழிச்சாலையில் மனிதத்தலைகளை நட்டுவைப்பதாக சொல்வதும், மிதிவண்டியில் வருபவரை அதிசயமாகப்பார்க்கும் பார்வையாக ரசிக்கவைக்கும்படி காட்சிப்படுத்தி இருந்தார்.

ஆயத்த ஆடைகள் தயாரிக்கும்போது வரும் உபரித்துணிகளை அடுப்பெரிக்கப் பயன்படுத்தினால்  புற்று நோய் வரும் என்பது இந்த  நூல் வாயிலாக அறிந்துகொண்ட புதியத்தகவல். சாக்கடையாக, சாயத்தண்ணீராக  மாறி விட்ட நொய்யலை மீட்டெடுப்பது எப்படி?

சுமங்கலித்திட்டம் பற்றி பல வருடங்களுக்கு முன்னர் நீயா நானாவில் ஒரு பெண் பேசினார். அவர் நேர்முகமாக அதில் பாதிக்கப்பட்டிருந்தார். கிறிஸ்துவின் சடலம் உயிர்தெழலற்று அழுகிக்கிடப்பது போல இருக்கிறது இந்த தேசம். சரி தான்!. எத்தனை நன்னீர் ஊற்றுகள் இருந்தாலும், குடிக்க சுத்தீகரிக்கப்பட்ட நீர் தானே இன்றைய நிதர்சனம். 

கடைசி ஒரு சில அத்தியாயங்களில் மட்டும் மூட்டைப்பூச்சி, கைத்தடி போன்றவை மூலமாக காட்சிகள் நகர்வது தனியாகத்தெரிந்தது.

மொத்தத்தில் இது ஒரு நல்ல வாசிப்பு அனுபவம்!.சமூக அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளரின் முக்கிய படைப்பு .ஆட்சியாளர்கள் யோசிக்க நிறையவிஷயங்கள் இருக்கின்றன. சுமங்கலி திட்டம், பள்ளிமாணவர்கள் குடிக்க ஆரம்பிப்பது இப்படிப்பல. இவற்றில் முக்கியமான ஒன்று- வெளி நாட்டிலிருந்து வருவோர் எப்படி நம் சமூகப்பாதுகாப்பைப் பாதிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வது என்பது. கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் பன்னிரண்டு வயதுக்கும் கீழே உள்ள பெண்பிள்ளைகள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்கு, அங்கு வரும் அதிக அளவிலான வெள்ளையின வெளிநாட்டவரும் முக்கியக்காரணம்.

அந்நிய செலவாணி என்று மட்டும் யோசிக்காமல், மொத்தமாக யோசித்து செயல்படாவிட்டால், இந்தியாவின் முதலுக்கு மோசம் வந்துவிடும்.


மாலு :

நைராவை போலவே பெயர் புதிது. சொல்லுக்கான பொருள் முதலில் எனக்குத் தெரியவில்லை. 
மாலு என்பது ரப்பர் மரங்களில் போடப்படும் கோடு.

திரு.சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் (தங்கமீன் வெளியீடு) தான் மலேசிய வரலாற்றை எனக்கு அறிமுகம் செய்தது.  இந்தப் படைப்பில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களான விக்னேஷும் , அப்பாசாமியும் இணைகோடுகளாகக் கதையை நகர்த்தி செல்கின்றனர். எங்கும் அவர்கள் சந்திக்கவில்லை. 
திரு.சுப்ரபாரதிமணியனின் யுக்தியாக நான் இந்தப் படைப்பிலும், மலேசியா பற்றிய தகவல்கள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் தரப்பட்டிருந்ததைக் கவனித்தேன்.
அவை மலேசிய வரலாற்றைப்பற்றி தெரிந்துகொள்ள பெரிதும் உதவின.

பெ. ராஜேந்திரன்- தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கம் சொன்னதாக வரும் கருத்து:

இங்கு படைக்கப்படும் இலக்கியங்களையும், இலக்கியவாதிகளையும் மலேசியர்கள் அறியாமல் இருப்பார்கள். ஆனால், தமிழ் நாட்டினரையும், அங்கு படைக்கப்படும் இலக்கியத்தையும் நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம்.
இந்தச் செய்தி என்னை யோசிக்க வைத்தது.

மலேசியர்கள் பன்னிரண்டு வயது வரை மட்டுமே தாய்மொழி படிக்கும் வாய்ப்பை பெற்றவர்கள். அவர்களின் சவால்கள் முற்றிலும் வேறானவை.
தமிழ் நாட்டிலிருந்து எழுதுபவரை விட, தம் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள மலசியத்தமிழர்கள் அதிகம் போராட வேண்டியிருக்கிறது.

லங்காட் நதிக்கரை, ப.சிங்காரத்தின் புயலில் ஒரு தோணி, The Bridge on the River Kwai என அரவமிருப்பவர்கள் மேலும் படிக்க என விரித்துச்சொன்னது மிகவும் உதவியாக இருக்கிறது. 

தமிழர்கள் தம் தொழிலில் முன்னேற முடியாமல் இருப்பது ஏன் என்ற யோசனை எல்லாருக்கும் இருக்கும்.

அதை யோசனையாக நிறுத்தாமல், தர்க்கரீதியாக பதில் சொல்ல முனைந்திருப்பது சிறப்பு. 
புற உலகம் என்று வரும்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நீட்டி எழுதிய அளவில், மலேசியாவிலிருக்கும் விக்னேஷை சுற்றிய உலகம் காட்சிகளாக கண்ணில் விரியும் அளவில் சொல்லப்படவில்லை. அங்கங்கே தெரியும் கிளைக்கதாபாத்திரங்களான கிருஷ்ணமூர்த்தி போன்றோர் எப்படி போலீஸ்க்கு பயந்து மூஞ்சூர் போல உடலைகுறுக்கி அமர்கிறார்கள் என்பது, அங்கு தலைமறைவு வாழ்க்கை வாழ்வோரின் பயத்தைக்காட்டியது. 

எத்தனை முறை எச்சரித்தாலும் எனக்கு நடக்காது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து வெளிநாடுகளில் ஏமாறுவோரும் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள். 

  பினாங்கு, மலாக்கா, ஜோஹோர் போன்ற பகுதிகளுக்கு சென்று வந்திருக்கிறேன். கடைநிலை வேலைகளில் தமிழர்கள் அதிகம் இருப்பதைக்கண்கூடாகப்பார்க்க முடிகிறது.

திரு.சுப்ரபாரதிமணியனின்  புத்தகங்கள் விரித்துரைக்கும் சராசரி மக்களின் வாழ்க்கை போராட்டங்களும், அவற்றை சுற்றி இருக்கும் அரசியலும், நம்மை சுற்றியுள்ள உலகை புதிய கோணத்தில் அவதானிக்க வைக்கின்றன. 

No comments:

Post a Comment