Wednesday, April 5, 2017

அமைதியைத்தேடி- சித்தானந்த சுவாமி கோயில் (பாண்டிச்சேரி)

வழக்கமாக பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வரும் குடும்பங்கள், மணக்குள விநாயகரையும், அன்னையின் ஆஸ்ரமம், ஆரோவில், அழகிய கடற்கரை என்று வந்து போவார்கள்.

பிரெஞ்சு அரசின் எச்சங்களாய் அழகாய் வடிவமைக்கப்பட்ட பழைய கால கட்டிடங்கள், முறையான வகையில் செங்குத்தாய் பிரியும் சாலைகள், சிவப்பு கலர் தொப்பி அணிந்த போலீஸ் என்று பாண்டிச்சேரி பல விதமாய் உங்களை  ஈர்க்கும் .

அமைதியை நாடி போகக்கூடிய மற்றொரு இடம் சித்தானந்த சுவாமி கோயில். சென்ற வருடம் தான் கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
பாரதியார் இங்கு தான் குயில் பாட்டு எழுதினர். குயில் தோப்பு என்று அழைக்கப்படும் இந்த பகுதியில், எஞ்சி இருப்பவை ஒரு சில மரங்களும், ஒரு குளமும், சித்தானந்தரின் சமாதியும் தான்.

எல்லா மெய்ஞ்ஞானிகளுக்கும் சிலை வடித்திருக்கிறார்கள். உள்ளே பாரதியாரின் சிலையும் இருக்கிறது. 



சித்தானந்த சுவாமி 1837 ஆம் வருடம் ஜீவ சமாதி அடைந்துவிட்டார். திருப்பாதிரிப்புலியூர் ஈசனின் அருள் பெற்றவர்.வண்டிப்பாளையம் என்ற ஊரை சேர்ந்த இந்த மகான், முத்துகுமாரஸ்வாமிப்பிள்ளை என்பவரின் வேண்டுக்கோளுக்கு இணங்கி பாண்டிச்சேரிக்கு வந்தார். அவர் வந்து சேரும்முன்னரே, வெகு நாட்களாக நோய்வாய்ப்பட்ட முத்துக்குமாரசுவாமி பிள்ளையின் மனைவி நலம் அடைந்தார்.
இப்படியாக பலருக்கும் நன்மை அவரால் ஏற்பட்டது. 

பாரதியார் புதுவை வரும்முன்னரே சித்தானந்தசுவாமி சமாதி ஆகிவிட்டார். 

சித்தானந்த சாமி கோயில் பற்றிய பாரதியாரின் பாடல் 

 சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலி
 தீப வொளி யுண்டாம் - பெண்ணே 
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட 
மூண்ட திருச் சுடராம் - பெண்ணே 

உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும் 
ஓட்ட வருஞ் சுடராம் - பெண்ணே 
கள்ளத் தங்க ளனைத்தும் வெளிப்படக் 
காட்ட வருஞ் சுடராம் - பெண்ணே 

தோன்று முயிர்க ளனைத்து நன்றென்பது 
தோற்ற முறுஞ் சுடராம் - பெண்ணே
 மூன்று வகைப்படு கால நன்றென்பதை 
முன்ன ரிடுஞ் சுடராம் - பெண்ணே

 பட்டினந் தனிலும் பார்க்க நன்றென்பதைப்
 பார்க்க வொளிர் சுடராம் - பெண்ணே 
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக் 
காண வொளிர் சுடராம் - பெண்ணே.

இந்த கோயிலின் உள்ளத்தின் அழுக்கையும், உடலின் குறைகளையும் துடைக்கும் என்கிறார் பாரதியார். 

பட்டினம் தன்னிலும்  பார்க்க நன்றென்பதை பார்க்க ஒளிர் சுடராம் என்ற வரி அருமை. 
உள்ளத்துக்கு அமைதியை அள்ளிதருகிறார் சித்தாந்த சுவாமி.
அருட்ஜோதியாய் தெய்வம் உறையும் கோயிலில் இதுவும் ஒன்று.

(நன்றி: http://bharathipayilagam.blogspot.sg/2012/05/blog-post_6836.html)




No comments:

Post a Comment