Thursday, March 3, 2016

மானுடம் வாழும் -சுசீலா மாமி! (மன்னை நினைவலைகள்)

மெத்த படித்தவரல்ல; ஆணும் பெண்ணும் சரி நிகர் என எண்ணும் குடும்பத்தில் வந்தவரும் அல்ல.
பைங்காநாட்டில் பிறந்து 12 வயது வரை மட்டுமே பள்ளிக்கு அனுப்பட்டவர்;
சுட்ட அப்பளமும், வத்த குழம்புமாய், வறுமையில் மிக செம்மையாய், சிக்கனமாய் குடும்பம் நடத்தும் பெண்மணி.

என் நினைவில் , பாதி  வெள்ளையும் , பாதி  கறுப்புமாய்  இரண்டே கால்கள் கொண்ட எலி வால் பின்னல்; அதில் ஒரு கிள்ளு பூ.
அள்ளி சொருகிய ஆறு முழ புடவை. கைகளிலும் கால்களிலும் எப்போதும் இருக்கும் மருதாணி நிறம்.
மாமி சற்றே மாநிறம் ஆனவர். வாயில் அவ்வவ்போது பெருகும் எச்சிலை முழுங்கியவாறே பேசுவார்.முகத்தில் எப்போதும் தேக்கிய புன்னகை அவரின் தனித்த அடையாளம்.
நிக்க நேரமில்லடி வித்யா; அம்மாவை வார மலரை எடுத்து வெக்க சொல்லு, வரும் போது வாங்கிகறேன் என்பார்.

மென்பொருள் துறையில் உள்ள கஷ்டங்களை பற்றி பலரும் பேசுகிறோம். அனால் இது தான் வேலை என்று இல்லாமல் எத்தனையோ வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றிய பெண்கள் அநேகம்.

மாமிக்கு இது தான் வேலை என்று இல்லை. சமையல் வேலை செய்வார்; வார பத்திரிகைகளை வாங்கி, அவற்றை பல வீடுகளுக்கு படிக்க கொடுத்து, அவற்றுக்கு ஒரு தொகையை வாங்கி கொள்வார்.
ரேஷனில் கால் கடுக்க நின்று உங்கள் வீட்டின் பொருட்களையும் வாங்கி கொண்டு வந்து தருவார்; கத்திரி வெயில் வாட்டும் நாட்களிலும் கூட வடகம் போட்டு விற்பார். எங்கள் தெரு குழந்தைகள் யார் போய் கேட்டாலும்,சுவையான எலுமிச்சை பிழிந்த காரமான அரிசி வடக மாவு கை நிறைய தருவார்.

மாமிக்கு கால்ல சக்கரம் தான் வெச்சுருக்கு; மேல ரெண்டாம் தெருலேந்து அசேஷம் வரைக்கும் கூட தினமும் நடப்பார். 18 நாள் உற்சவத்திற்கும், எங்கள் மன்னை ராஜ கோபாலனை பார்க்க மாமி ஆஜர்.
எங்களை மாதிரி சில குடும்பங்களுக்கு மாமி வந்து சாமியின் டைம் டேபிள்  சொல்வார்; சாமி இன்னும் கீழ ராஜ வீதியில இருக்கு; சீக்கிரம் போங்கோன்னு.
ஒரு நாளும் உடம்பு முடியலைன்னு சொல்லி பாத்ததில்ல  நாங்க.

அன்றைக்கு (1980-2000)  எந்த ஒரு வீட்டில் இல்லாதது  கேமரா. மாமியின் புகைப்படம் இல்லை என்னிடம். மன்னையில் அன்று இருந்த பல குடும்பங்கள் இன்று சென்னைக்கு பயணித்து விட்டன. மாமி போன்று சிலர் எங்கள் நினைவில் என்றும் நீங்கா முகமே.

மாமிக்கு மூன்று பெண்கள்; நார்மடி உடுத்திய பாட்டி- மாமியின் மாமியார்- உடல் வற்றிய ஒரே வேளை ஒரு கை உண்ணும்  பாட்டி .அவர் சிறுமியாய் இருக்கும் போது வெள்ளைகார துரை குதிரையில் வந்தால் எப்படி நடுங்கி ஒளிந்துகொள்வர் என கதை சொல்லுவார்.மாமா ரிடையர் ஆகி, எலெக்ட்ரிசிட்டி வேலை பார்த்தார்.

சாதி மத பேதமில்லாத ஒரு விஷயம்  பெண் சிசுக் கொலை ; நவ நாகரிகம் மிக்க இந்த நாளிலும் நடக்கும் அவலம்.

வரதட்சணை கொடுமை அதிகம் இருந்த எண்பதுகளில், பெண் குழந்தைகள் எல்லா வீடுகளிலும் வரவேற்கப்பட்ட மழலைகள் அல்லர்.

மாமியின் மூன்றாவது பெண் குழந்தை பிறந்த போது அதை உடனே மேல் உலகம் அனுப்ப தயாராய் இருந்தன சுற்றங்கள்.
அஞ்சு பெண்ணை  பெத்தா அரசனும் ஆண்டி ஆவான்;உன் புருஷன் ஒண்ணும் அரசனும் இல்ல என்பதான புத்தி மதிகள் வேறு.

மாமி மிக தெளிவாய் முடிவெடுத்தார்- என் குழந்தைக்கு தேவையான பணத்தை நான் எப்பாடு பட்டாவது சம்பாதிக்கிறேன்; என் குழந்தை வாழ வேண்டும்.அன்றிலிருந்து ஓட்டம் தான்.
மூன்று பெண்களையும் படிக்க வைத்து, நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்தார்.
கடைசி பெண்ணுக்கு திருமணம் செய்ய ஒரு வருடம் அமெரிக்காவில் தெரியாத யாரோ ஒருவர் வீட்டில் சிறு பிள்ளையை பார்த்துக்கொள்ள போனார்.
நிறைய நேரங்களில், படித்த நல்ல வேலைக்கு செல்லும் பெண்களுக்கே அவ்வப்போது தோன்றும் அவ நம்பிக்கை, சுய திறமை குறித்த சந்தேகம் எனத் தோன்றும் தருணங்களில், நம்பிக்கை நட்சத்திரமாக மனக்கண்ணில் தோன்ற வேண்டியவர் மாமி போன்றவர்கள்.

வீடு வேலைகளிலோ, அலுவலக வேலைகளுக்கோ, நிறைய நேரங்களில் அங்கீகாரம் தேடும் தலைமுறை நாம். மாமி போன்றவர்கள் வாழ்க்கையில் நல்ல பாராட்டை எப்போதோ ஒரு முறை தான் பார்த்து இருப்பார்கள்.

மாமி இப்போது சென்னையில் இருக்கிறாராம்.  பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டன; அடுத்த இந்திய பயணத்தில் எங்கு இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். மாமிக்கு ஒரு சல்யுட்!







Sunday, November 15, 2015

இந்த கோலத்தை ரசிக்கலாமா :)

நம்ம ஊர் கோலங்கள் பல வகை, - சிக்கு கோலம், பூக்கோலம், கலர் கோலம்னு!
பெல்ஜியம் நாட்டின் ப்ருச்செல்ஸ் (Brussels) நகரத்தில் வருட வருடம், இந்த பூக்களால் ஆன தரை அலங்காரம் சுற்றுலா பயனிகளுக்களை கவரும் வகையில் அமைக்க படுகிறது.இது  2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகஸ்ட் மாதம் ஒரு வார இறுதியில் அமைக்க படுகிறது.
75 மீ நீளமும், 24 மீ அகலத்திலும், ஒரு சதுரத்தில் 300 பூக்கள் என, 4 மணி நேரத்தில், 100 பேரின் கை வண்ணம் இது.


இது நம்ம வீட்டுக்கோலம்!


நம்ம கலாச்சாரத்தை சின்னகுழந்தைகளுக்கு அழகா சொல்லி தர, பலகாரத்தையும், பல வண்ண கோலங்களும் அழகான வழிகள் :)


எப்படி இருக்குனு சொல்லுங்க!!!


Saturday, August 8, 2015

அப்படி என்ன தெரிந்துக்கொள்ள வேண்டும்???- சிங்கப்பூரிடம் !


இன்று, சிங்கப்பூர் பொன் விழா காண்கிறது.மிக சிறிய நாடாக இருந்தாலும், பெருமைக்குரிய பல சாதனைகளைக்கடந்து, உலக நாடுகள் மதிக்கும் முக்கிய நாடாக தன்னை எப்போதும் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறது. திரு.லீ குவான் யூ அவர்கள் வழி நடத்திய இந்த தேசம், நல்லொழுக்கமும், பல்வேறு இனத்தவரும், வேறுபாடின்றி ஒன்றாய் வாழ முடியும் என்பதன் முன் மாதிரி.

ரொம்ப சின்ன ஊருய்யா; அதான் நல்லபடியா செய்ய முடியுது!!!!. இது இந்தியாவிலிருந்து வரும் பலரும் சொல்வது. 

ஆனால் இந்த நாட்டின் சாதனை, ஊழலற்ற அரசாங்கம், தொலை நோக்கு பார்வையுடன் தீட்டப்ட்ட திட்டங்கள், மக்களின் முழு ஒத்துழைப்பு என,இந்த வெற்றிக்கு உந்து சக்தியாக இருக்கும் பல விஷயங்கள் வளர்ந்து வரும் பல நாடுகள் எளிதில் சாதிக்க முடியாதவை.


 ஒரு 8 ஆண்டுகள் இங்கு வாழ்ந்த அனுபவத்தில், சில வித்தியாசங்கள், சட்டென கண் முன் விரிகின்றன.


  • மறந்தும் யாரும் குப்பைகளைக்கண்ட இடத்தில் வீசுவதில்லை. 300/500 வெள்ளி அபராதம் பொது இடத்தில் குப்பை போடுவோருக்கு- இரண்டாம் முறை சிறை தண்டனை என, சட்டம் கடுமையாய் இருக்கிறது.



  • நம்ம ஊரிலே நம்மளை படாதபாடு படுத்தும் கொசுக்களைக்கட்டோடு அழிக்கிறார்கள்.டெங்கி தாக்குதல் உங்கள் குடியிருப்பு பகுதியில் தெரிந்தால், உங்கள் வீட்டுக்கு தீடீரென சோதனைக்கு அலுவலர்கள் வருவார்கள்; கழிவறை, பூச்சாடி என  தண்ணீர் தேங்கி இருக்கிறதா என்று கண்டு செல்வார்கள்.
  •  எல்லா அரசு துறைகளின், இணைய பக்கங்களில் உங்களுக்கு தேவையான தகவல்கள், படிவங்கள், அவற்றை இணையத்தில், கட்டணத்தோடு சம்ர்ப்பிக்க வழிகளும் இருக்கின்றன. இதனால், அரசு அலுவலகங்களின் நேரம், வீணாவதில்லை. பொது மக்களும், விடுமுறை எடுத்துக்கொண்டு அலைய தேவையில்லை.
  • எல்லா இன பெண்களும், பயமின்றி படிக்கவும், வேலைபார்க்கவும் முடியும். சட்டங்கள் மிகக்கடுமையாய் இருப்பதால் பெண்களை யாரும், கேலி செய்வதை பார்க்க முடியாது.இந்தியாவில், பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்கொடுமைகளுக்கு, இது முற்றிலும் வேறான அனுபவம்.
  • எங்கு சென்றாலும் கழிவறைகள், குழந்தைகளின் கைத்துண்டு(Diaper) மாற்றும் அறை இருக்கும். அதனால்,நாள் முழுக்க பயந்துக்கொண்டு, தண்ணீர் அருந்தாமல், அலைய வேண்டியதில்லை.
  • ஒரு மருத்துவமனையிலிருந்து, நீங்கள் வீட்டுக்கு செல்வதற்கு முன், மொத்தப்பணத்தையும் கட்டத்தேவையில்லை. மொத்தப்பணம் எத்தனை செலுத்த வேண்டும் என்பது, வீட்டுக்கு ஒரு கடிதமாய் வரும். நீங்கள் தவணையில் செலுத்தலாம்.

  • எல்லா உணவுக்கூடங்களுக்கும் அவற்றின் தூய்மையைக்கணக்கில் கொண்டு (A/B/C),  என பிரிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் வீட்டில் சமைக்க முடியாமல், அலுவலகம் நோக்கிச் செல்வோரும், தம் வயிற்றைக்காத்துக் கொள்ள இது உதவுகிறது.
  • வாடகைக்காரில் செல்லும்போது, பயணிப்பவர், கண்ணுக்குத்தெரியும்படி, வாகனத்தின் எண்ணும், ஓட்டுனர் பெயரும் இருக்கும்.இது உங்களின் பாதுகாப்பிற்கென இவர்கள் கடைப்பிடிக்கும் விதி. சென்னை போன்ற நகரங்களில், பெண்கள் தனியாக பயணிக்கும் பொழுதுகளில், நம் இந்திய அரசாங்கம் பின் பற்ற வேண்டிய சின்ன உதாரணம்.
  • குடி நீரைப்பாதுகாக்க அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. பசுமைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நிலம் மிக சிறிய அளவிலிருப்பதால், இங்கு பல அடுக்கு வீடமைப்புப்பேட்டைகள் அதிகம். ஆனால் எங்கும் குழந்தைகள் விளையாடவும், பெரியவர்களின் உடற்பயிற்சிக்கும் வசதிகள் கண்டிப்பாக இருக்கும்.



  • தமிழ் இங்கே உண்மையில் வாழும் மொழியாக இருக்கிறது. எங்கள் திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலிருந்து, நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ் மொழி விழா, அவ்வையார் விழா, திருமுறை மாநாடு, பைந்தமிழ் விழா, கம்பன் விழா, என்று, இங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் அதிகம்.
  • நடைமுறை சிக்கல் அதிகமில்லாமல், அமைதியாக வாழவும், நம் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வழி செய்கிறது சிங்கப்பூர்.
  • குறை மாதத்தில் பிறந்த என் மகன் இன்று நல்லபடியாய் இருப்பதற்கு, சிங்கப்பூரின் மருத்துவ வசதிகளும், தூய்மையான சூழலும் முக்கியக்காரணங்கள்.!
சிங்கப்பூர் தேசிய தின வாழ்த்துக்கள்!!!




Sunday, March 29, 2015

காலத்தை வென்றவர்- திரு. லீ குவான் யூ!

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறையென்று வைக்கப் படும்
."-திருக்குறள்

இங்கு இன்று, சிங்கை மக்களின் இறைவனாய் உயர்ந்த  திரு.லீ குவான் யூ அவர்களின், இறுதி சடங்குகள் நடைபெற்றன.

இது சிங்கையில்  அனைவருக்கும் மனதிற்கு மிகக்கனமான ஒரு வாரம். கொட்டும் மழையிலும், கொஞ்சமும் நகராமல், அவர் பெயரை முழங்கியவாறு, வீதியெங்கும் நின்ற மக்கள் கூட்டத்தில்,மக்களுக்காக  சேவையாற்றிய அவரின் உயரிய வாழ்வும், மக்கள் தம் நல்வாழ்க்கைக்கு வித்திட்ட திரு.லீ அவர்களுக்குக்காட்டும் நெஞ்சார்ந்த நன்றியும் வெளிப்பட்டன.




சிங்கப்பூருக்கு இந்தியாவிலிருந்து  வந்த என் போன்ற முதல் தலைமுறைக்கு இங்கு நடப்பது அதிசயம்.இந்த தீவுத்தேசம் தன் 50வது ஆண்டில் இருக்கிறது.

நாங்கள் இந்தியாவிலிருந்து இங்கு வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. முதல் முறை சிங்கை மண்ணில் காலடி வைத்ததுமே அதன் விண்ணளவு வளர்ச்சியை கட்டிடங்கள் சொல்லாமல் சொன்னாலும், மறுபக்கம் இது பசுமை நகரம் என்பது காணும் பச்சை நிற மரங்கள் சொல்லும்.இந்த நகரம் பூங்கா நகரமாக திகழ வித்திட்டவர் திரு.லீ.


சிங்கப்பூரில் அன்றைய அடிப்படை தேவைகளான நல்ல வீடுகள், சுத்தமான தண்ணீர், உயர் தர கல்வி என எல்லாவற்றிலும், இவரும், இவருடைய சகாக்களும் செய்த பணிகள் என்றும், சரித்திரத்தில் நீங்கா இடம் பெறுவன.

ஒற்றுமையான மக்கள்; ஒருங்கிணைந்த தேசம் என்று முழங்கியவர் திரு.லீ. 

சிங்கையில் அவரவர் தாய் மொழியையும் பயில வழி வகுத்தவர் திரு.லீ. நாங்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்தாலும் கூட இன்றைய நகர பள்ளிகள் தமிழை சிறு பிள்ளைகள் படிக்க வழி வகுக்கின்றனவா என்பது நம் மனசாட்சிக்குத்தெரியும்.!!! 

இங்குள்ள ஒரு பள்ளியில் படிக்கும் என் 4 வயது பிள்ளை, ஆத்திச்சூடியை அழகாய் சொல்ல சொல்ல, என் மனம், திரு.லீ அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறது.

பெயரளவில் தமிழை வளர்க்கிறோம் என்று பேசுவதற்கும், நடைமுறையில்,உண்மையில் தமிழை இளையர்களுக்குக்கொண்டு சேர்க்கும் சிங்கப்பூருக்கும், ரொம்ப தூரம்!!!

இன்றைய இரங்கல் கூட்டத்தில் பேசிய ஒருவர் மலாய் மொழியில் ஒரு கவிதை வாசித்தார். ஒருவர் உங்களுக்கு செய்த நற்செயலை உங்களால் எப்படியும் ஈடு செய்ய முடியாது என்றார்.

உண்மை தான்!!!. ஒரு தாயாக, என் பிள்ளை 33 வாரங்களில், 1.5 கிலோ எடையில் பிறந்த போது எங்களைக்காத்து, நாங்கள் இன்று நல்லபடியாய் இருக்க காரணம்,சிங்கப்பூரின் மருத்துவ தொழில் நுட்பமும், எங்களை சுற்றி இருந்த நல்ல உள்ளங்களும் தான்.
 திரு.லீ போன்ற பெரியவர்கள், மருத்துவ துறை எப்படி இயங்க வேண்டும், என்று விதித்த செயல் திட்டத்தின் பலன் தான், இங்கு  பிறக்கும் எடைக்குறைந்த குழந்தைகளைக்கூட  எப்படியாவது பிழைக்க வைக்கும் வித்தையைச்செய்கிறது.

என் பிள்ளையைக்கண்ணென காத்த செவிலியரில், அனைத்து இனத்தவரும் உண்டு.
ஒரு பெண்ணாக எந்த நேரத்திலும் அச்சமில்லாமல், வெளியே சென்று வர முடியும் என்ற பாதுகாப்பிற்குக்காரணம், திரு.லீ அவர்கள் வகுத்த கடுமையான சட்டங்கள்.

எங்கள் தஞ்சை மாவட்ட கிராமங்கள் பலவற்றிலிருந்தும், சிங்கை மண்ணினால் உயர்ந்த குடும்பங்கள் பல.

ஊழலற்ற அரசாங்கம், தகுதிக்கு முன் உரிமை என்று திரு.லீ நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய ராம ராஜ்யம், உலக நாடுகள் பலவற்றுக்கு ஒரு வாழ்க்கை பாடம்.

வழக்கமாக எங்களுக்குத்தெரிந்து நம்மூரில் அரசியல் கட்சி தலைவர், கைதானாலோ, அல்லது இறந்தாலோ, பாதிப்பு சாதாரண மக்களுக்குத்தான்; பேருந்து ரயில் சேவைகள் பாதிக்கப்படும். ஆனால் இங்கு  அவருக்கு மரியாதை செலுத்த வந்த கூட்டத்தினருக்காக 24 மணி நேரமும் ரயில் சேவையும், பேருந்து வசதியும் இருந்தன.

எங்கள் அடுக்ககத்திற்கு அடிக்கடி மக்களைச்சந்திக்க வருவார் சட்டத்துறை அமைச்சர் திரு.சண்முகம்.அரசியலில், கடை நிலை ஊழியர் கூட பத்து பேரோடு அலையும் சூழலுக்கு பழகிய நமக்கு இவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.



திரு.லீ, அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இறுதி மரியாதை செய்த கூட்டத்தில் நாங்களும் இருந்தோம் என்பதே எங்களுக்கு ஒரு நிறைவு தந்தன. அன்னாருக்கு என்றும் எங்கள் பிரார்த்தனைகள்!


Friday, November 28, 2014

சிரிக்கும் மலர்கள்!

எதிலும் அவசரமாய், இயந்திர கதியில் இயங்கும் வாழ்க்கையில், நம் கண்ணெதிரே, சொர்க்கத்தைக்கொண்டு வரும் பல வண்ண மலர்களில் சில இங்கே!

எங்களின் அடுக்ககத்தில், தோட்ட வேலைக்கு சிறப்புக்கவனம் செலுத்த படுகிறது. வருடா வருடம், சிங்கப்பூரில்,சுற்றுப்புறச்சூழல் அமைச்சின் போட்டிகளில் முதல் பரிசைத்தட்டி செல்ல வேண்டும் என்று, குறியாய் இருக்கிறார்கள். வாழை இலை, வெற்றிலை, முருங்கை கீரை, ஒமச்செடி என எல்லாமும் எங்கள், அடுக்கக்தொகுதிக்கு உள்ளேயே உள்ளன.

இதில் உள்ள எல்லா மலர்களின் பெயர்களும் எனக்குத் தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்!

ஒவ்வொரு நாள் முடிந்து வீட்டுக்கு வரும் போதும், படியருகே இம்மலர்கள் சிரிக்கின்றன.

அலுவலகம் அடுத்த வாரம் ஊரின் மறு கோடிக்கு மாறுகிறது. அழகான சூழலும், நல்ல நட்பாய் அமைந்த நண்பர்களும், பத்தடி தொலைவில் இருக்கும் கோயிலையும் விட்டு, வேறங்கும் மாற மனமில்லை.

பாரதியாரின் காணி நிலம் வேண்டும் பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.

வீடென்பது வெறும் சுவர்கள் மட்டும் இல்லையே!. எங்கள் அடுக்ககத்தின், தோட்ட ஆர்வலர்களுக்கு ஒரு ஷொட்டு!












Monday, November 24, 2014

தோல் பாவைக்கூத்து- சிங்கப்பூர் கலா உத்சவம் (2014)

எல்லா ஆண்டுகளிலும், பெரும்பாலும் கேரளாவிலிருந்து, ஒரு படைப்பு கண்டிப்பாக, கலா உத்சவத்தில் நடக்கிறது.

கடந்த ஆண்டுகளில்,இங்கு கதகளியும், நங்கையர் கூத்தும் பார்த்தோம்.

சிங்கையின் சின்னமான மீன் வால் சிங்கத்தின் (Merlion)முன்னே; அழகான மாலையில், படகுகள் பின்புறம் மிதந்து வர, கேரளத்தின் பாரம்பரிய வாத்திய கருவிகளுடன், இந்த முறை தோல் பாவைக்கூத்து!.

திறந்த வெளியில், உட்கார இடமில்லை; பல நாட்டவர்; நிறைய சிறார்கள்!

கைப்பேசியில் தொடங்கி, அவரவரும், இந்த நிகழ்ச்சியைப்படம் பிடித்துக்கொண்டிருந்தனர்,

இது, கேரளத்தின், பொம்மலாட்டம்; கம்ப ராமாயணத்தை அடிப்படையாகக்கொண்டது.

அதென்னவோ தெரியவில்லை; இது மாதிரி நிகழ்ச்சிகளில்-ஒருவராவது, குரல் வளத்தில் பாடகர் யேசுதாசை நினைவுபடுத்துகின்றனர்.

கேரளாவில், இந்த கூத்துக் காண்பிக்க இதற்கென்றே, கூத்து மண்டபங்கள் இருக்கின்றன.
21 எண்ணைய் விளக்குகள், சம இடைவெளியில், திரையின் பின்னே இருக்கின்றன. மாலை ஒரு 7.30 மணிக்கு இருக்கும், அந்தி வெளிச்சத்தில், முதலில் ஒரு ஆனைமுகன் துதி; பிறகு ஒரு பகவதி வந்தனம்.

அவர்களின் தோல் பாவைகளில், அங்கங்கே மெலிதாய், குண்டூசி ஓட்டைகள்; அவை அழகாய் முன் புறம் பார்ப்பவரின் அனுபவத்தை மேலும் இனிதாக்குகின்றன.

இந்த கலையில் அவர்கள் பயன்படுத்தும் வாத்தியங்கள்- பலா மரத்திலான எழுபறை(Ezhupara), இலதளம்(cymbals), சங்கு, குருங்குழல் முதலியன.

இளவல் லட்சுமணர்  பர்ணசாலை அமைக்க இடம் தேடுகிறார்; மான், மயில், சிங்கம், யானை என பல மிருகங்கள் எங்கள் முன்னே ஓடின; வில்லில், ஒரு நாணேற்றினார்; எல்லாம் ஓடி விட்டன; ஒரு மரத்தை வெட்டினார், சம்புகுமாரனை வதைத்தார்.

காணொளி இங்கே : http://youtu.be/0Aa3UhipYNo

சூர்ப்பனகை ராமரையும், லட்சுமணரையும், மணமுடிக்க ஆசைப்படுகிறாள். கோதவரி நதிக்கரையில் காலைக்கடன்களை முடிக்க வரும், ராமரிடம் தன் ஆசையை சொல்கிறாள்; ராமர் மறுக்க;பர்ணசாலையில் உள்ள சீதையைப்பார்த்து, இவளால் தான் ராமர் என்னை ஏற்கவில்லை ; இவளைக்கொன்று விடலாம் என முன்னேற; இளவல், அவள் மூக்கையும், காதுகளையும் அறுக்கிறார்.
சூர்ப்பனகை ராவணனிடம் சென்று, சீதையின் அழகை வர்ணிக்கிறாள்


"அம்மா தூக்கம் வருது போகலாம் !"என குழந்தை சொல்ல
தோல் விசிறி!
அரை மனதாய் கிளம்பினேன்;
பாரம்பரிய கலைகளுக்காக வாழ்ந்து வரும் கலைஞர்களை வாழ்த்தியபடி!

Wednesday, August 20, 2014

தேடிக்கண்டு கொண்டேன் - திருவதிகை (A trip to Thiruvadhigai Temple, TamilNadu)

To read the below in English: Click here.https://docs.google.com/document/d/1XxZ5bJde3yoIXLhVnp3xJQ-vMVKEjnLsJ1Z8mz0gzcY/edit?usp=sharing

இந்த முறை இந்தியா சென்றபோது, முன்கூட்டியே இதுவரைப்பார்க்காத கோயில்களில், சிலவற்றை பெற்றோருடனும், பிள்ளையுடனும் பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.

நாங்கள் அனுபவித்த திருவதிகைக்கோயில் பற்றிய பகிர்வு இதோ!

திருவதிகை:
1.முதல் தேவாரப்பதிகம், பாடப்பெற்றக்கோயில்;
2.கெடில நதிக்கரையில் அமைந்த தலம்;
3.அப்பர் பெருமானின் அக்கா திலகவதியார் அன்றாடம், தன் தம்பி திரு நாவுக்கரசர் சைவ நெறியைப்பின்பற்ற வேண்டி சிவனாரை, நெஞ்சுருகி வழிப்பட்ட தலம்.
4.சிவபெருமானின், 8 வீரட்டானத்தலங்களில் இதுவும் ஒன்று.
இறைவன்: வீரட்டானேசுவரர்; இறைவி: கெடில நாயகி


இந்த தலம், பன்ருட்டி அருகில் உள்ளது.
எங்களுக்கு சுமார் 2 மணி நேர பயணம், பாண்டிச்சேரியில் இருந்து.

நாங்கள், ஒரே நாளில், திருவதிகை, திருவந்திபுரம், மற்றும், திருப்பாதிரிப்புலியூர் சென்று தரிசித்து வந்தோம்.

கால மாற்றத்தில், இன்றைய திருவதிகை ஒரு சிறிய கிராமம்; காலை 8 மணி!
ஒரு திருமணம் முடிந்து, மணமக்களும், சுற்றத்தாரும், கோயிலை விட்டு,வெளியேறிக்கொண்டிருந்தனர்;
மணப்பெண்ணின் வெட்கத்தைப்பார்த்து புன்னகைத்தபடி நடந்தோம்.
அதிக பேர் இல்லை.
கோயிலின் முன்புறத்தோற்றம் உங்களுக்காக:



முதலில் கண்ணில் பட்டது இந்தஅருகக்கடவுளின் சிலை.
சிவன் கோயிலில், அருகக்கடவுள் சிற்பம், அதிசயம் தான்!

இந்தக்கோயில்,முதலாம் மகேந்திர வர்மனால் (Mahendra Verma Pallava -I) 6ஆம் நூற்றாண்டில், முதலில் சமணக் கோயிலாய் (Jain Temple) கட்டப்பட்ட இடத்தில், பின்னர் அதே அரசரால், சிவன் கோயிலாய் கட்டப்பட்டது.

27 நட்சத்திரம், மற்றும் 12 ராசிக்காரர்களுக்கான மரங்களை,
வளர்த்து வைத்திருக்கிறார்கள். அவசியம்,மூலிகை சம்பந்தமாக ஆராய்ச்சி செய்பவர்கள் பார்க்க வேண்டிய கோயில்.

பெரும்பாலும் நம் தலமரங்கள், மூலிகைத்தாவரங்களே. சமீபத்தில், நெல்லிமரத்தைத் தல விருட்சமாகக்கொண்ட திருநெல்லிக்கா என்ற தலத்தைப்பற்றி அறிந்தேன்.

சரி! திருவதிகையைப்பற்றி, பார்ப்போம்!

அப்பர் பெருமானின் சூலை நோய் , அவரை முடக்கி எடுக்க, இந்தக்கோயில், வீரட்டானேசுவரரிடம், தன் நோய் தீர்த்தருள வேண்டிப்பாடினார்.
முதல் தேவாரப்பாடல் உருவானது!.





இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலும், அப்பர் பெருமானின் மிகுந்த வலியையும், தாங்க முடியாத வேதனையில், மனித மனம் என்னவெல்லாம் சொல்லி அழுமோ,அந்த உணர்வையும் பிரதிபலிக்கிறது.

லிங்க திருமேனியில், 16 செங்குத்தான உலோக பட்டைகள் காணப்படுகின்றன. மனதை வருடிய தரிசனம்.


இங்குள்ள சரக்கொன்றை மலர்கள், நாம், பரவலாய், காணுகின்ற பூக்கள் தான்; அவை நீர்ழிவு நோய்க்கு மருந்து. நாங்கள், கேரளத்தின், திரு அஞ்சைக்களத்திற்கும், இதே தல விருட்சம் எனக்கண்டோம்; அது, சுந்தரர், விண்ணகம் நோக்கி புறப்பட்ட தலம்; இது அப்பரை, இறைவன், ஆட்கொண்ட தலம்.

மிகுந்த வேதனையிலிருந்து, மன அமைதி தர வல்லது, இந்த தலம்.

இன்றும், மன நிம்மதி வேண்டியும், தன் வயிறு சம்பந்தமான உபாதைக்கள் தீரவும் இங்கு வருவோர் பலர். (Intestine related/Ulcer Ailments cure).

கண்ணுக்கு அழகாய், அரிதான, நிறைய சிற்பங்கள்; அவற்றில், சில இங்கே.
புகைப்படங்களைக்காண கீழ்கண்ட படத்தில் சொடுக்கவும்.
அன்னதானம், தினமும் நடக்கிறது. நாங்கள் அடுத்த வாரத்தில் வந்த எங்கள் மண நாளில், அன்ன தானத்திற்கு, கொடுத்து, விடை பெற்றோம்!. நீஙகளும் போய் வாருங்கள்